ஓம் கங்கணபதயே நம
ஓதிமலையப்பனே போற்றி
அகத்தியம் வாழ்க அகத்தீசன் தாள் வாழ்க நொடியின் நொடிப்பொழுதும் எம்மை பிரியோன் தாள் வாழ்க
தென்திசை சமன் செய்த குரு நாதன் தாள் வாழ்க அட்டமாசித்தருளி அண்ணிப்பான் தாள் வாழ்க
உருவன் அருவன் சித்தனடிவாழ்க
விந்திய கர்வம் தடுத்தாண்ட விடை நேசனடி வெல்க
நம்பியோரை கைவிடாத நன்நெறியோன் கழல்கள் வெல்க
புனிதன் புண்ணியன் பூங்கழல்கள் வெல்க
நின்னை நினைத்தாலே உள் உருகும் கருணைக் கழல்கள் வெல்க
நின்னை பற்றியோர் இடர்களையும் சித்தன் கழல்கள் வெல்க
குருவடி போற்றி குருநாதன் அடிபோற்றி அகத்தியன் அடிபோற்றி ஆசான் அடி போற்றி சுவடியில் வந்துதிக்கும் சூட்சும னடிபோற்றி மாயையை ஒழித்து ஞானம் அருளும் அண்ணல் அடிபோற்றி பொதிய மலை அரசன் அகத்தீசனடி போற்றி
வற்றாத ஞானம் அருளும் மலை போற்றி கும்பமுனி நீ எம் குருவாய் வந்ததினால் நின் கருணையால் நின் பாதம் வணங்கி இப்பிறவி முழுவதும் உன் திருநாமம் உரைத்து எங்கள் வினை தீர போற்றி வணங்குவோம் யாம்.
கமண்டலம் ஏந்தி கருணை விழியோடு நீ தோன்றாத் துணையனாய் நாடியில் வந்தெய்தி
எங்கள் கற்பனைக்கும் கணக்கிற்கும் எட்டாத அருள் வழங்கி நஞ்சு அடங்கிய நாகத்தின் மேல் ஒளிரும் மாணிக்கமாய் இருள் சூழ்ந்த எங்கள் மனதில் ஒளியாய் இருப்பவன்
எத்தனை பிறவிப் பெருங்கடல் நீந்தி வந்தோம் யாமறியோம் ஐயனே
கடுகின் மணியளவு புண்ணியம் செய்திருப்போம் இல்லையெனில் நின் திருநாமம் உரைக்கவோ நின் திருப்பாதங்களை பற்றவோ எமக்கேது பாக்கியம்
தடுமாறி தத்தளித்த எம்மை கரையேற்றி காத்தது நீ அல்லவா
தும்பை மலரோனே தூயவனே நவகோடி சித்தர்கள் எல்லாம் அய்யனே அகத்தியா என போற்றும் புண்ணியனே சிவனின் புதல்வனே விண்ணும் மண்ணும் சேர்ந்தளந்தாலும் அளவிடமுடியாதவனே அடியவர் மனதில் அன்பால் அடங்கிநிற்பவனே
இறை தூதனே மறை நாயகனே கள்ளமும் கபடமும் மிகுந்து நிற்கும் இவ்வுலகில் உன்னருள் மட்டுமே ஆறுதல் அளிக்குதய்யா
எவ்வறிவும் இல்லாத எங்களுக்கு மெய்ஞானம் அளிக்கும் ஞான உபதேசிகனே
நாடி வருவோர்க்கு நாடியில் வந்தெய்தி
நலம் அருளும் நன்னெறியோனே
சத்தியனே நித்தியனே உத்தமனே
விதியினை மாற்றுவாய் வினைகளை அகற்றுவாய் ஞானப் பாதை காட்டிடுவாய் வீடுபேறு தந்திடுவாய்
மலரின் மடியில் தேங்கிநிற்கும் தேன் போல எங்கள் மனதின் மடியில் ஊறி நிற்கும் அமுதே பிறவியின் துன்பம் போக்கும் எங்கள் குரு தேவனே யுகயுகமாய் விண்ணோரும் மண்ணோரும் வணங்கி வழிபடும் வல்லோனே
பாசி படர்ந்து மூடிய குளமாய் வினைகளால் மூடி மும்மலம் சேர்ந்து வஞ்சகம் நிரம்பி வழியும் இந்த பாவ உடலில் உம்மை வணங்கி உள்ளே அகத்திய ஜோதி ஏற்றினோம் மன இருள் போக்கும் ஒளியே உன்னையே நினைத்து மனம் உருகுதே உருகியே கரைகிறதே
அற்ப்பர்கள் எங்கள் வினை மாற்றி எம்மை தேற்றி
எண்ணிலடங்கா இன்பமருளும் இகபரனே எம் அரனே ஆண்டவனே உன்னை அறிய முடிந்த இப்பிறவியே எங்கள் புண்ணிய பிறவி உன் அருளால் உம்மை அறிந்தோம்
சங்கடங்கள் தீர்க்கும் சத்குருவே சகலமும் அறிந்த சமரனே சாந்தனே
யுத்த களத்தில் தசரத மைந்தன் தத்தளித்து நின்றபோது தக்க சமயத்தில் ஆதித்ய ஹிருதயம் அருளி மனக்கிலேசம் போக்கியவனே
எங்கள் போக்கிடமும் உன் திருவடிகளே
தாயின் அன்பும் தந்தையின் பண்பும் ஒரு குணத்தில் இணைந்தால் அதுவே குரு உறவாம் கும்பமுனியே குழந்தை மனதோனே
நீயே எம் குரு கும்பிடுகிறோம் உன்னை எங்கள் செருக்கழித்து வாழ்வினை செம்மையாக்குவாய்
அகத்தீசா என்று அழைத்தால் அப்பனே மைந்தனே அம்மையே மகளே என்று அன்பு காட்டி கருணை செய்கிறாய் கண்ணீர் பெருகுதய்யா
கருணாமூர்த்தியே கற்பகத்தருவே கண்கண்ட தெய்வமே காலத்தை வென்றோனே காக்கும் கடவுளே
ஆதி சித்தனை தந்தையாக உமாசங்கரியை தாயாக குகனை குருவாக தமிழை கருவாக கொண்டவா
பச்சை வண்ணோன் பிரியனே மயில்வாகனனின் மனசாட்சியே
ஒழுக்கம் என்றால் அகத்தியன் அகத்தியன் என்றால் ஒழுக்கம் என்று பார்வதி தேவியின் பாராட்டு பெற்றவனே
கல்யாண தீர்த்தம் எங்கள் கவலையெல்லாம் தீர்க்கும் பாபநாசம் எங்கள் பாவங்களை நாசமாக்கும் அகத்தீஸ்வரம் எங்கள் அகத்தில் ஈஸ்வரம் ஊறவைக்கும் பலராமபுரம் பலகோடி புண்ணியங்களை தந்துவிடும் பொதிகை மலை எங்கள் வினை பொதிகளை எல்லாம் கரைத்துவிடும்
தரணி காக்க பரணி தந்தாய் காடுகள் காக்க காவிரி தந்தாய் உடற்பிணியினை போக்க சித்த வைத்தியம் தந்தாய் மனப்பிணியைப் போக்க ஜீவநாடியில் வந்தாய் வழிகாட்டி அருள் ஊட்டி பாலை மனதை சோலை ஆக்கினாய்
அழியும் இவ்வுடலுக்கு
ஆயிரமாயிரம் அழியும் ஆசைகள்
அழியும் எதுவும் வேண்டாம் அகத்தியா அழியாத உன் கருணை மட்டுமே எங்களுக்குப் போதும் அகத்தியப்பா
அழியும் உடல் அக்னிக்கு அர்ப்பணம் அழியாத எங்கள் ஆத்மா அகத்தியனுக்கு சமர்ப்பணம்
பிறவிகள் இனி வேண்டாம் அகத்தியா வினையின் பயனாக இனி பிறந்தாலும் உன் பிள்ளையாகவே பிறக்கவேண்டும் அகத்தியா அகத்தீசா அகத்தியப்பா
உன் காலடி நிழலிலேயே வாழ வேண்டும் வரம் தருவாய் குருதேவா உன் புனித பொற்பாதங்கள் போற்றி போற்றி
கும்ப மலை வாசனே போற்றி போற்றி
சதுரகிரி சஞ்சாரியே போற்றி போற்றி
பொதிகை மலை அரசனே போற்றி போற்றி தாமிரபரணி தாயே போற்றி போற்றி காவேரி தாயே போற்றி போற்றி அம்மை லோபமுத்ரா உடனுறை அகத்தீஸ்வரா போற்றி போற்றி நின் திருவருளால் வளம் பெற்று வாழட்டும் வையகம் ஓங்கி செழித்து பரவட்டும் அகத்தியம்🙏🏼🙏🏼🙏🏼
🌹சுபம் 🌹
No comments:
Post a Comment