உ திருச்சிற்றம்பலம்
ஆதி கணபதி பாதம் காப்பு ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு. வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு அருணகிரிநாதர் பாதம் காப்பு |
திருப்புகழ் -அறிவிலாப் பித்தர் (காஞ்சீபுரம்) | பதம் பிரித்தல் மற்றும் பதவுரை | பொருளுரை |
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் | அறிவுஇலாப் பித்தர், உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அறிவு இலாப் பித்தர் = அறிவு இல்லாத பித்தர்.
உன்றன் அடி தொழா = உன்னுடைய திருவடியைத் தொழாத.
கெட்ட வஞ்சர் = கெட்ட வஞ்சகர்கள். | மெய் அறிவு இல்லாத பித்துப் பிடித்தவரும், தேவரீருடைய திருவடியை வணங்காத கொடிய வஞ்சகரும், |
அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத | அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அசடர் = முட்டாள்கள்.
பேய்க்கத்தர் = பேய்க்குணம் உடையவர்.
நன்றி அறியாத = நன்றி அறிதல் இல்லாத. | கீழ்மக்களும்,பேய்த்தன்மை கொண்டு அலைபவரும்,நன்றியறிவும் இல்லாத |
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து | அவலர்மேல் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,
அவலர் மேல் = வீணர்கள் மீது (பயனில்தாவர்கள்)
சொற்கள் கொண்டு = சொற்கள் கொண்டு
கவிகளாக்கிப் புகழ்ந்து = பாடல்கள் அமைத்துப் புகழ்ந்தும் | பயனற்றவர்களும், ஆகியோர் மீது நல்ல சொற்களைத் தொடுத்து பாடல்களைப் புனைந்து பாடி அவர்களைப் புகழ்ந்து |
அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் | அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,
அவரை வாழ்த்தித் திரிந்து = அவர்களை வாழ்த்தியும் திரிந்து பொருள் தேடி = செல்வத்தைதேடி | அவர்களை வாழ்த்தியும், அவர்கள் இருக்கும் இடம்தொறும் திரிந்து, பொருளைத் தேடி, |
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து | சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
சிறிது கொட்டிக்கொணர்ந்து = சிறிதளவு சேகரித்துக் கொண்டு வந்து
தெரு உலாத்தித் திரிந்து = தெருக்களில் உலவித் திரிந்து | சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொண்டு வந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து |
தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் | தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
தெரிவை மார்க்கு = விலை மாதர்களுக்கு
சொரிந்து = (அப்பெண்களுக்கு) நிரம்பக் கொடுத்து
அவமே யான் = வீண் காலம் கழித்து நான். | அப் பொது மகளிருக்கே அந்தப் பொருளை மழைபோல் சொரிந்து, வீண் காலம் கழித்து நான் |
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து | திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, பரிந்து,
திரியும் மார்க்த்து = திரிகின்ற போக்கால்.
நிந்தை அதனை மாற்றி = ( அதனால் வருகின்ற) நிந்தை மொழி ஒழியும்படி அருளி
பரிந்து = என் மீது அன்பு கூர்ந்து | திரிகின்ற புல்லிய வழியின் இகழ்ச்சியை மாற்றி, அடியேன் மீது அன்பு வைத்து,
|
தெளியமோட் சத்தை யென்று ...... அருள்வாயே | தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.
தெளிய மோக்ஷத்தை = நான் தெளிவு பெற வீட்டின்பத்தை
என்று அருள்வாயே = என்று எனக்கு அருள்வாய்? | என் அறிவு தெளிவு பெறுமாறு முத்தி இன்பத்தை எனக்கு என்றைய தினம்தான் தருவிரோ? |
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து | இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து
இறைவர் = இறைவனது மாற்று அற்ற செம்பொன் = மாற்றில்லாத செம்பொன்வடிவம்
வேற்று = உருவம் வேறாகும்படி
பிரிந்து = அவரிடமிருந்து பிரிந்து | சிவபெருமானுடைய திருமேனி உருகிய செம்பொன்போல் ஒளிமயமாக விளங்கும். "பொன்னார் மேனியனே",
உமாதேவியார் உலகம் உய்யும் பொருட்டு ஒளிகட்கு எல்லாம் மூலகாரணமாய் உள்ள சிவபெருமானுடைய திருக்கண்களை மூடியருளினார். அதன் காரணமாக உலகமெல்லாம் இருண்டுவிட்டது. அதன் காரணமாக, இறைவனை விட்டுப் பிரிந்து, |
இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன் | இடபமேல் கச்சி வந்த ...... உமையாள்,தன்
இடபம் மேல் = ரிஷப வாகனத்தின் மேல்
கச்சி வந்த = காஞ்சீபுரத்துக்கு வந்த
உமையாள் தன் = உமையாளுடைய | மண்ணுலகு உற்று, காஞ்சியம்பதியில் கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கத்தை எழுந்தருளப் புரிந்து வழிபாடு ஆற்றினர். அம்மையின் அன்பை உலகு உணரப் புரிவான் வேண்டி, பெருமான் நதியில் வெள்ளம் வரச் செய்தனர். அதுகண்ட அம்மை, தனக்கு ஆபத்து வந்தது என்று எண்ணாது, சிவலிங்கத் திருமேனிக்குப் பழுது வருகின்றதே என்று பயந்து, இலிங்கத்தைத் தழுவிக் கொண்டனர். |
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த | இருளை நீக்கத் தவஞ்செய்து அருள நோக்கிக், குழைந்த
இருள் நீக்க = அஞ்ஞானம் நீங்க
தவம் செய்த அருள் நோக்கி = (அம்மையின்) தவத்தைப் பார்த்து.
குழைந்த = உருகின
| அம்மையின் அன்பைக் கண்ட ஆலமுண்ட நீலகண்டர் குழைந்து அநுக்ரகம் புரிந்தருளினர். |
இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே | இறைவர் கேட்கத்தகும் சொல் ...... உடையோனே
இறைவர் கேட்கத் தகும் சொல் = சிவபெருமான் கேட்டு மகிழத் தக்க உபதேசச் சொல்லை
உடையவனே = உடையவனே | சனகாதிகட்கு உபதேசித்த சிவபெருமானும் கேட்பதற்கு உரிய பிரணவார்த்தமாகிய செஞ்சொல்லை உடையவர் முருகப் பெருமான். |
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று | குறவர் கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று,
குறவர் கூட்டத்தில் வந்து = குறவர்களின் கூட்டத்தில் வந்து
கிழவனாய்ப் புக்கு நின்று = கிழ வேடத்தில் (காட்டில்) புகுந்து நின்று. | குறவர்களின் கூட்டத்தில் வந்து, கிழ வேடத்தில் (காட்டில்) புகுந்து நின்று |
குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக் | குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குருவி ஓட்டித் திரிந்த = குருவிகளை ஓட்டிக் காவல் புரிந்து திரிந்த
தவ மானை = தவம் நிறைந்த மானாகிய வள்ளியை. | வள்ளிநாயகியார் தினைப்புனத்தில் ஏனல் காத்திருந்தனர். பாசபந்தம் நீங்கப் பெறாது இருந்தமையால் குமரப் பெருமான் வேட வடிவுடனும், கிழ வடிவுடனும் போய் ஆடல் புரிந்தனர். உண்மை வடிவு காட்டாது ஒழிந்தனர். பின்னர் யானையைக் கண்டவுடன் உயிர்க்கு இறுதி நேரும்போது சுற்றமும் நண்பரும் உதவுதல் இல்லை, எம்பெருமானே அப்போது பற்றுக்கோடு என்று பாசபந்தம் நீங்கப் பெற்றனர். |
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த | குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
குணமதாக்கி = தன் வசப் படுத்தி .
சிறந்த வடிவு காட்டி = தனது தெய்வ வடிவைக் காட்டி
புணர்ந்த = அவளுடன் சேர்ந்த . | அங்ஙனம் குணமதாக்கிய பின் செவ்வேள் சிறந்த வடிவு காட்டி ஆட்கொண்டனர். |
குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே. | குமர கோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.
குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே = குமர கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே | குமரகோட்டம் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சிறந்த முருகர் கோயில் ஆகும். அங்கு ஆண்டவன் காண்பார் கண்ணும் கருத்தும் ஒருங்கே கவரும் கவினுடன் விளங்கி அடியார் அலக்கண் அகற்றி அருள்புரிகின்றனர். |
No comments:
Post a Comment