உ திருச்சிற்றம்பலம் ஆதி கணபதி பாதம் காப்பு ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு. வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு | ||
சிறப்புப் பாயிரம் தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் | ||
02 திருவாசகம்- கீர்த்தித் திரு அகவல் | பதவுரை | பொருளுரை |
தில்லை மூதூர் ஆடிய திருவடி | தில்லை = சிதம்பரம் / இந்த அண்டம் முழுவதும் தோன்றி ஒடுங்குதற்கு இடமான முந்தய தில்லை மூதூர் = பழைய முதுமையான ஊர் ஆடிய = பிற ஊர்கள் எல்லாம் தில்லைக்கு பின் உருவாக்கிய ஊர் என்ற பொருள்.ஆகையால் முன்பு ஆடிய நடனம் ( இறந்த காலம் இங்கு ஆடிய என்று பொருள்) | இந்த அண்டம் முழுவதும் தோன்றி ஒடுங்குதற்கு இடமான முந்தய தில்லை என்ற சிதம்பரம் என்ற பழைய முதுமையான ஊரில் பலகாலம் முன்பு நடனம் ஆடிய இறைவன் திருவடிகள் |
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி | பல் உயிர் எல்லாம் = பல உயிர்கள் எல்லாம் பயின்றனன் = தங்கி அருள் செய்தல் / உயிர்கள் எல்லாவற்றுள்ளும் விளங்கி / பொருத்தப்பெற்றவன் ஆகி | இந்த உலகத்தில் உள்ள பல உயிர்கள் எல்லாவற்றிலும் தங்கி, உயிர்கள் எல்லாவற்றுள்ளும் விளங்கி அருள் செய்தவனாகிய என் இறைவன் ஈசன் |
எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கி | எண்இல் = எல்லை இல்லாத பல்குணம் = பல வகைப்பட்ட அருள் குணங்கள் எழில் = அழகு | அளவில் அடங்காத (எல்லை இல்லாத ) பல வகை அருள் குணங்களும் எழுச்சி அழகு பெற விளங்கி (இறைவன் இவ்வாறு பலவகை குணங்களுடன் விலங்கினதால் , அனைத்து உயிர்களும் அப்படியே பலவகை குணங்களுடன் உருவாகின என்ற பொருள் ) |
மண்ணும் விண்ணும் வானோர் உலகும் | மண்ணும் = மண் என்ற இந்த புவி உலகிலும் விண்ணும் = தேவர்கள் வசிக்கும் விண் உலகிலும் வானோர் உலகும் = தேவர்கள் தலைவர்கள் திருமால் , பிரம்மன், ருத்திரன் , மகேஸ்வரன் ஆகிய வானவர்கள் உலகிலும் | மண் என்ற இந்த புவி உலகிலும், தேவர்கள் வசிக்கும் விண் உலகிலும் ,தேவர்கள் தலைவர்கள் திருமால் , பிரம்மன் , ருத்திரன் , மகேஸ்வரன் ஆகிய வானவர்கள் உலகிலும் |
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 | துன்னிய = செறிந்த கல்வி = கலை அறிவு தோற்றியும் = தோற்றுவித்தும் , உருவாக்கியும் | செறிந்த கலை கல்வி அறிவை தோற்றுவித்தும் பின்னர் அதனை அழித்தும் |
என்னுடை இருளை ஏறத்துரந்தும் | என்னுடை = என்னுடைய இருளை = ஆணவமான அறியாமை என்னும் இருளை ஏற = முழுவதும் துரந்தும் = நீக்கியும் , போக்கியும் ஏறத்துரந்தும் = பறித்து எறிந்தும் | என்னுடைய ஆணவமான அறியாமை எனும் இருளை முழுவதும் போக்கியும் , அதனை வெளியேறும்படி செய்தும் |
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் | அடியார் உள்ளத்து = சிவன் அடியவர்கள் உள்ளத்தில் மீதூரக் = மேலும் மேலும் பெருக | சிவனடியவர்கள் உள்ளத்தில் சிவன் மீது அன்பு மேலும் மேலும் பெருக |
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் | குடியாக் கொண்ட = அடியவர்கள் உள்ளதை தனது இருக்கையாக கொண்ட என் இறைவா சிறப்பும் = தலைமை பண்பும் | அடியவர்கள் உள்ளதை தனது இருக்கையாக கொண்ட என் இறைவா உனது கொள்கையும் தலைமை பண்பும் |
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் | நிலைபெற்ற இந்த மண் உலகில் , புவி உலகில் மகேந்திரம் = மகேந்திர மலை என்பது பொதிகை மலைக்கு தெற்கே உள்ளது என்று கம்ப ராமாயணம், வான்மீகம் , சிவதருமோத்திரம் முதலிய நூல்கள் கூறுகின்றன. இந்த மலை கன்னியாகுமரியை அடுத்து பரந்து இருந்தது. மாமலை = மிகப்பெரிய மலை | நிலைபெற்ற மிகப்பெரிய மலை மகேந்திரம் அதனில் |
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10 | ஆகமம் = முதல் நூல் சொன்ன ஆகமம் = முன்னர் ஒருகாலத்தில் அம்மை பார்வதி உமை அன்னைக்கு பரமேஸ்வரன் சொன்ன ஆகமம் என்ற முதல் நூல் தோற்றுவித்து = மீண்டும் உருவாக்கி அருளியும் = உபதேசம் செய்து | முன்னர் ஒருகாலத்தில் அம்மை பார்வதி உமை அன்னைக்கு பரமேஸ்வரன் சொன்ன ஆகமம் என்ற முதல் நூலை மீண்டும் உருவாக்கி உமை அன்னைக்கு பரமேஸ்வரன் உபதேசம் செய்து |
கல்லாடத்துக் கலந்து இனிது அருளி | கல்லாடம் = ஒரு சிவ தலம் | கல்லாடம் என்ற சிவ தலத்தில் உமை அம்மை வழிபட்ட திரு உருவில் கலந்து இனிதாக அருளி |
நல்லாளோடு நயப்புறவு எய்தியும் | நல்லாளோடு = உமாதேவியோடு நயப்பு = இன்பம் உறவு = நட்பு எய்தியும் = அடைந்தும்,கொண்டும் | உமாதேவியோடு பேரின்ப நட்பு கொண்டும் |
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் | பஞ்சப்பள்ளியில் = பஞ்சப்பள்ளியி என்ற ஊரில் பால்மொழி = பால் போல இனிய சொற்கள் தன்னொடும் = உமையாளோடு சேர்ந்து | பஞ்சப்பள்ளி என்ற ஊரில் பால் போல இனிய சொற்கள் பேசும் உமையாளோடு சேர்ந்து |
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் | எஞ்சாது = என்றும் குறையாத ஈண்டுதல் = மிகுதல் ஈண்டும் = மிகுதி ஆகின்ற இன்அருள் = இனிய அருளை விளைத்தும் = செய்தும் , உருவாக்கியும் | என்றும் குறையாத மிகுதி ஆகின்ற இனிய அருளை விளைத்தும் |
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 | கிராதன் = வேடன் வேடமொடு = வடிவோமோடு கிஞ்சுகம் = முருக்கு பூ கிஞ்சுக வாய் = முருக்கு பூ போன்ற சிவந்த வாய் கிஞ்சுக வாயவள் = முருக்கு பூ போன்ற சிவந்த வாய் உடைய அன்னை பார்வதி தேவி | வேடன் வடிவத்தில் முருக்கு பூ போன்ற சிவந்த வாய் உடைய அன்னை பார்வதி தேவி முருக்கு பூ |
விராவு கொங்கை நல் தடம் படிந்தும் | விராவு = கலத்தல், நெருக்குதல் கொங்கை = தனங்கள் தடம் = பெருமை | ஒன்றோடு ஒன்று கலந்த தனங்களாகிய நல்ல தடாகத்தில் மூழ்கியும் (வேடன் வேடத்தில் வேட்டை ஆடிய இறைவன் தன் வெம்மை நீக்கும் வண்ணம் ஒரு நீர் தடாகத்தில் மூழ்கினான் என்று உவமை கொள்க ) |
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் | கேவேடர் = வலைஞன் ஆகி = வடிவம் கொண்டு கெளிறது = கெளிற்று மீன் | இறைவன் மீனவ வலைஞன் வடிவம் கொண்டு கடலில் உள்ள கெளிற்று மீனை பிடித்து |
மாஏட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் | மாஏட்டு ஆகிய ஆகமம் = முன்பு கடலில் வீசிய மிகப்பழமையான மிகப்பெரிய ஆகம நூல்களை வாங்கியும் = மீட்டு எடுத்தும் | முன்பு கடலில் வீசிய மிகப்பழமையான மிகப்பெரிய ஆகம நூல்களை மீட்டு எடுத்தும் |
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து | மற்றவை தம்மை = அங்ஙனம் வாங்கிய ஆகம நூல்களை மகேந்திரத்து இருந்து = மகேந்திர மலையில் இருந்து | அங்ஙனம் வாங்கிய ஆகம நூல்களை மகேந்திர மலையில் இருந்து |
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20 | ஐம் முகங்கள் = ஈசானம் , தட்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் உற்ற ஐம் முகங்களால் = சிவபெருமான் தனது ஐந்து திரு முகங்களால் பணித்து அருளியும் = உபதேசம் புரிந்து அருளியும் | சிவபெருமான் தனது ஐந்து திரு முகங்களால் உபதேசம் புரிந்து அருளியும் |
நந்தம் பாடியில் நான் மறையோனாய் | நந்தம் பாடியில் = சிவ தலமான நந்தம் பாடி என்ற ஊரில் நான் மறையோனாய் = நான்கு வகை வேதங்கள் அறிந்த வேதியனாக | சிவ தலமான நந்தம் பாடி என்ற ஊரில் நான்கு வகை வேதங்கள் அறிந்த வேதியனாக |
அந்தம் இல் ஆரியனாய் அமர்ந்து அருளியும் | அந்தம் = முடிவு அந்தம் இல் = முடிவு இல்லாத ஆரியனாய் = ஆசிரியனாய் | முடிவு இல்லாத ஆசிரியனாய் அமர்ந்து அருளியும் |
வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும் | வேறு வேறு உருவும் = வெவ்வேறு திரு உருவமும் இயற்கையும் = தன்மைகளும் | வெவ்வேறு திரு உருவமும் வெவ்வேறு தன்மைகளும் |
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி | நூறு நூறு ஆயிரம் = நூறு லட்சம் இயல்பினது = தன்மைகள் | பல நூறு லட்சம் தன்மைகள் உடையதாகி |
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25 | ஏறு = ரிஷபம் / காளை ஏறு உடை = காளை வாகனம் உடைய புவனி = உலகம் | காளை வாகனம் உடைய ஈசன் இந்த உலகத்தில் ஆன்மாக்கள் உயர்வு அடைய |
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் | கூறு = பகுதி, பிரிவு, பங்கு கூறு உடை மங்கை = ஈசன் உடலில் பாதியாக உள்ள உமை அம்மை தானும் = ஈசனும் | ஈசன் உடலில் பாதியாக உள்ள உமை அம்மையும் , ஈசனும் உடன் வந்து அருளி |
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக் | குதிரையை நடத்திக்கொண்டு குடநாடு = திருப்பெருந்துறைக்கு ( ஆவுடையார் கோயில்) மேற்கே மதுரை இருந்ததால் அதற்கு குடநாடு என்று பெயர் இட்டார் மாணிக்கவாசகர் | குதிரையை நடத்திக்கொண்டு திருப்பெருந்துறைக்கு ( ஆவுடையார் கோயில்) மேற்கே உள்ள மதுரைக்கு |
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் | சதுர் = திறமை சதுர்பட = திறமை உள்ள சாத்து = வணிகர்கள் திகம் பேர் உள்ள கூட்டம் சாத்தாய் - வணிகக்கூட்டமாய் தான் = ஈசனே எழுந்தருளியும் = வந்து அருளியும் | திறமை மிக்க வணிகக்கூட்டமாய் ஈசனே வந்து அருளியும் |
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக் | வேலம் புத்தூர் = ஒரு இடம் விட்டேறு = வேல் படை | வேலம் புத்தூர் என்ற ஊரில் வேல் படையை விட்டு அருளி |
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30 | கோலம் = திருஉருவம் | தனது திருவுருவம் அதனை அழகாக காட்டிய தன்மையும் |
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர் | தர்ப்பணம் அதனில் = கண்ணாடியில் வழிபட ( வேடன் ஒருவனுக்கு அவன் வேண்டிய வாள் , படை முதலியவற்றை கண்ணாடியின் வாயிலாக அளித்த வரலாற்றை கூறும் என்றும் பொருள் ) சாந்தம் புத்தூர் = திருச்சந்தம்புத்தூர் என்ற ஊரில் சாந்தம் புத்தூர் என்ற இடத்தில் வேடன் ஒருவன் கண்ணாடியில் இறைவன் திருவுருவம் அமைத்து , வழிபாடற்ற அந்த வழிபாட்டினை இறைவன் ஏற்று அந்த கண்ணாடியில் இருந்து வெளிப்பட்டு அவன் விரும்பிய வரத்தை ஈசன் கொடுத்தார் என்று ஒரு வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில ஏகலைவன் எனும் வேடன் துரோணாச்சாரியார் உருவத்தை அமைத்து வழிபட்டு சிறந்த வீரனாக விளங்கினான் என்பதை நினைவு கூற வேண்டும். | கண்ணாடியில் வழிபட திருச்சந்தம்புத்தூர் என்ற ஊரில் |
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும் | வில் பொரு வேடற்கு = வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்கு ஈந்த = வேண்டியவற்றை கொடுத்து அருளல் விளைவு = பயன் | வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்கு வேண்டியவற்றை கொடுத்து அருளிய பயனும் |
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி | மொக்கணி = அவித்த பயிறு , கொள்ளு , கடலை முதலியவற்றை வைக்கும் குதிரையின் தீனிப்பை (மொக்கணீசுவரர்) அருளிய = ஒரு அன்பருக்கு அருளுதல் பொருட்டு முழுத்தழல் மேனி = முழுமை ஆகிய நெருப்பை ஒத்த திருமேனியை இறை வழிபாட்டின் பின்னரே உணவு அருந்தும் கொள்கை உடைய வணிகன் ஒருவரை அவரின் மைத்துனர் குதிரைக்கு கொள்ளு காட்டும் பையில் மணலை நிரப்பி நடுவித்து அது சிவலிங்கம் என கேலி செய்தார். அந்த வணிகன் பூசையை முடித்த பின், அந்த பையை எடுக்க முயன்றபோது அது பாதாளம் வரை ஊடுருவி சிவலிங்கமாக மாறியது. அங்கு இறைவனுக்கு மொக்கணீசுவரர் என்ற பெயரும் உண்டானது. | கொள்ளுப்பையை லிங்கமாக காட்டி முழுமை ஆகிய நெருப்பை ஒத்த திருமேனியை |
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் | சொக்கது = லிங்க வடிவமாக தொன்மையும் = பழைய அருள் தன்மையும் | லிங்க வடிவமாக காட்டிய பழைய அருள் தன்மையும் |
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35 | அரி = திருமால் அரியொடு = திருமாலுடன் பிரமற்கு = பிரம்மாவாலும் அளவு அறி = அளவு அறியப்படாத ஒண்ணான் = அளவு அறியப்படாதவனாக இருக்கும் | திருமாலுடன் பிரம்மாவாலும் அளவு அறியப்படாதவனாக இருக்கும் |
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் | நரிகளை குதிரைகள் ஆக்கிய நன்மையும் | |
ஆண்டு கொண்டு அருள அழகு உரு திருவடி | ஆண்டு கொண்டு அருள = பாண்டிய மன்னனை ஆட்கொண்டு அருள அழகு உரு திருவடி = மிகவும் அழகு பொருந்திய திருவடி | பாண்டிய மன்னனை ஆட்கொண்டு அருள மிகவும் அழகு பொருந்திய திருவடி அதனை |
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று | பாண்டியன் தனக்கு = பாண்டிய மன்னனுக்கு பரிமா = குதிரையை | பாண்டிய மன்னனுக்கு குதிரையை விற்று |
ஈண்டு கனகம் இசையப் பெறாது | ஈண்டு கனகம் = திரண்ட பொன் ஈண்டுதல் = திரளுதல் இசையப் பெறாது = ஏற்காமல் | அதற்கு ஈடான திரண்ட பொன் பெறுதற்கு உடன்படாமல் |
ஆண்டான் எம்கோன் அருள் வழி இருப்பத் 40 | ஆண்டான் எம்கோன் = இந்த அடியவனை ஆண்ட எனது இறைவன் ஆகிய எம் அரசன் அருள்வழி இருப்ப = அருள் வழியை நான் நாடியிருக்குமாறு | இந்த அடியவனை ஆண்ட எனது இறைவன் ஆகிய எம் அரசன் அருள் வழியை நான் நாடியிருக்குமாறு |
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் | தூண்டு சோதி = ஒளி பொருந்திய தூண்டி சுடர் விட்டு எரியும் தோற்றிய தொன்மையும் = தோன்றிய பழமையும் | ஒளி பொருந்திய தூண்டி சுடர் விட்டு எரியும் விளக்கு போல் தோன்றிய பழமையும் |
அந்தணன் ஆகி ஆண்டு கொண்டருளி | அந்தணன் வடிவில் அழகு பொருந்தி வந்து என்னை ஆட்கொண்டு அருளி | |
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் | இந்திர ஞாலம் = மாய வித்தை போன்ற திருவிளையாடல் | மாய வித்தை போன்ற திருவிளையாடல் காட்டிய தன்மையும் |
மதுரைப் பெரு நல் மாநகர் இருந்து | பெருநல் மாநகர் = தோற்றத்தால் பெரியதும் பண்பால் நல்லதும் ஆட்சியில் சிறந்ததும் ஆகிய மதுரை | தோற்றத்தால் பெரியதும் பண்பால் நல்லதும் ஆட்சியில் சிறந்ததும் ஆகிய மதுரையில் இருந்து |
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45 | குதிரையை ஓடிக்கொண்டு சேவகன் ஆக வந்த தன்மையும் | |
ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப் | ஆங்கது தன்னில் = மதுரையில் அடியவர்க்கு ஆகப் = செம்மனச்செல்வி வந்தியம்மை என்னும் அடியவள் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் | மதுரையில் செம்மனச்செல்வி வந்தியம்மை என்னும் அடியவள் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்து அடியவர்க்கு அடியவர் ஆகி |
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும் | பாங்காய் = உரிமையாய் பரிசும் = பண்பும் | உரிமையாய் மண் சுமந்து அருளிய பண்பும் |
உத்தர கோச மங்கை உள் இருந்து | உத்திரகோசமங்கை என்ற தலம் | உத்திரகோசமங்கை என்ற ஊரில் இருந்து |
வித்தக வேடம் காட்டிய இயல்பும் | வித்தக வேடம் = ஞான ஆசாரியன் வடிவம் | ஞான ஆசாரியன் வடிவம் காட்டிய தன்மையும் |
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50 | பூவணம் = திருப்பூவணம் எனும் நகரில் தனக்கு அடியவளான பொன்னனையாள் என்ற அடியவருக்கு | திருப்பூவணம் எனும் நகரில் தனக்கு அடியவளான பொன்னனையாள் என்ற பெண்மணி அடியவருக்கு சித்தர் வேடத்தில் ரசவாதம் செய்து தனது திருமேனி கட்டி அருளிய தன்மையும் |
தூவண மேனி காட்டிய தொன்மையும் | தூவண = தூய்மையான | தூய்மையான தனது திருமேனி கட்டிய தன்மையும் |
வாத வூரினில் வந்து இனிது அருளிப் | வாத வூரினில் = திருவாதவூர் என்ற ஊரில் | திருவாதவூர் என்ற ஊரில் வந்து இனிதுஆக எனக்கு அருளி |
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் | பாதச்சிலம்பு ஒலி காட்டிய பண்பும் | பாதச்சிலம்பு ஒலி காட்டிய பண்பும் |
திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக் | செல்வம் பொருந்திய திருப்பெருந்துறை நகரின் செல்வனாக ஆகி | செல்வம் பொருந்திய திருப்பெருந்துறை நகரின் செல்வனாக ஆகி |
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55 | கரு = மூலம் | எப்பொருளும் மூலமாக அமைந்த ஜோதியில் மறைந்த தன்மையும் |
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப் | பூவலம் = திருப்பூவலம் என்ற சிவ தலம் பொலிந்து = ஒளிபோல் | திருப்பூவலம் என்ற அந்த ஊரில் ஒளிபோல் இனிதாக அருள் செய்து |
பாவம் நாசம் ஆக்கிய பரிசும் | பரிசும் = தன்மையும் | அடியவர்களின் பாவத்தை அடியோடு அழித்த தன்மையும் |
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து | சயம் பெற = ஜெயம்/வெற்றி பெற - தன் அடியவனான பாண்டியன் வெற்றி அடையும் பொருட்டு | தன் அடியவனான பாண்டியன் வெற்றி அடையும் பொருட்டு , பாண்டிய மன்னனின் படை வீரர்கள் தாகம் தணிக்க ஒரு சேவகனாக தண்ணீர் பந்தல் வைத்து திருவிளையாடல் புரிந்த ( நம்பி திருவிளையாடல் புராணம் - தண்ணீர் பந்தல் வைத்த படலம் ) |
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் | நல்ல தண்ணீரை அளிக்கும் சேவகன் வேடம் தரித்து அளித்த நன்மையும் | |
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60 | வெண்காடு = திருவெண்காடு என்ற சிவ ஸ்தலம் | திருவெண்காட்டில் ஒரு புதியவனாக , விருந்தினர் போல் வந்து |
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் | குருந்தின் கீழ் - குருந்த மர நிழலின் கிழே | குருந்த மர நிழலின் கிழே அமர்ந்து அங்கு உபதேசம் செய்த தன்மையும் |
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு | பட்ட மங்கையில் = பட்டமங்கலம் என்ற சிவ ஸ்தலம் | பட்டமங்கலம் என்ற சிவ ஸ்தலம் அதனில் அன்பாக அமர்ந்து |
அட்ட மாசித்தி அருளிய அதுவும் | அட்ட மாசித்தி = எட்டு வகை சித்தி | ஆறுமுக கடவுளுக்கு பால் ஊட்டி உணவு கொடுத்த 6 தாய்மார்களுக்கு அஷ்டமா சித்திகளை அருளிய திருவிளையாடலும் |
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு | வேடுவன் = வேடன் வேண்டு உரு = தனக்கு விரும்பிய அச்சப்படும் உருவம் | ஒரு வேடன் ஆகி தனக்கு விரும்பிய அச்சப்படும் உருவம் கொண்டு |
காடு அது தன்னில் கரந்த கள்ளமும் 65 | காடு அது தன்னில் = காடு அதனில் கரந்த = மறைந்த கள்ளமும் = தந்திரமும் | காடு அதனில் மறைந்த தந்திரமும் |
மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு | மெய்க் காட்டி இட்டு = படைகளின் உண்மையை காட்டுதல் ( மெய்க் காட்டிட்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பதாவது படலமாக அமைந்துள்ளது.) வேண்டு உருக் கொண்டு = வேண்டிய வடிவம் கொண்டு | படைகளின் உண்மையை காட்ட வேண்டிய வடிவம் கொண்டு |
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் | தக்கான் = தகுதி உடையோன் | தகுதி உடையோன் ஒருவனாக ஆகிய தன்மையும் |
ஓரி ஊரில் உகந்து இனிது அருளி | ஓரியூர் என்ற தலத்தில் ஒரு அம்மைக்கு மனம் உகந்து முதலில் விருத்தனாக ( வயோதிகனாக ) பிட்சை கேட்டு, உணவு அருந்திய பின்னர் குமாரனாக மாறினார். மாமியார் முதலியோர் வீட்டுக்கு திரும்பிய போது குழந்தையாக காட்சி கொடுத்து இனிதாக அருளி | |
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் | பார் = நிலவுலகம் | இந்த உலகத்தில் பிறவா பெருமையுடைய குழந்தை ஆகிய தன்மையும் ( விருத்த குமார பாலக திருவிளையாடல் ) |
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70 | ஈண்ட = திரண்ட | பாண்டூர் என்ற தலத்தில் அடியவர்கள் திரண்டு வந்து வணங்கும்படி எழுந்து அருளியதும் |
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் | தேவூர் = வேதாரண்யத்துக்கு சமீபத்தில் உள்ள ஒரு ஊர். தென்பால்= தெற்கு நோக்கிய திகழ்தருல் = விளங்குதல் | தேவூர் வேதாரண்யத்துக்கு சமீபத்தில் உள்ள ஒரு ஊர். அந்த தேவருக்கு தென் பகுதியில் ( இலங்கை) உள்ள ஒரு தீவில் |
கோவார் கோலம் கொண்ட கொள்கையும் | கோவார் = அரசன் போல | அரசன் போல வடிவம் கொண்ட தன்மையும் |
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில் | தேன் அமர் சோலை = வண்டுகள் அமரும் சோலை | தேன் எடுக்கும் வண்டுகள் அமரும் சோலைகளை உடைய திருவாரூரில் |
ஞானம் தன்னை நல்கிய நன்மையும் | ஞானம் = முக்தி அடைய உதவும் ஞானம் நல்கிய = அருளிய | முக்தி அடைய உதவும் ஞானம் அதனை அருளிய நலமும் |
இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75 | இடைமருது = திருவிடைமருதூர் ஈண்ட இருந்து = நெருங்கி வந்து | திருவிடைமருதூர் அதனில் அடியவர்களுக்கு நெருங்கி வந்து |
படிமப் பாதம் வைத்த அப்பரிசும் | படிமப் பாதம் = தூய திருவடிகளை ( அடியவர்கள் தலையில் ) பரிசும் = அருள் செய்த கருணை தன்மையும் | தூய திருவடிகளை அடியவர்கள் தலையில் வைத்து அருள் செய்த கருணை தன்மையும் |
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து | ஏகம் பத்தில் = காஞ்சி மாநகரில் இயல்பாய் = தனது இயல்பான உருவத்திருமேனியுடன் | காஞ்சி மாநகரில் தனது இயல்பான உருவத்திருமேனியுடன் வந்து |
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் | பாகம் பெண்ணோடு = ஈசன் இடப்பக்கத்தில் ஊமையம்மை | ஈசன் இடப்பக்கத்தில் ஊமையம்மை உடன் கூடிய அர்த்தநாரீஸ்வரராக உள்ள தன்மையும் |
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து | திருவாஞ்சியத்தில் = திருவாஞ்சியம் என்ற ஊரில் சீர்பெற = சிறப்பு பெற | திருவாஞ்சியம் என்ற ஊரில் சிறப்பு பெற எழுந்து அருளி |
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80 | மரு ஆர் = இயற்கை மனம் உடைய கூந்தல் குழலியொடு = உமாதேவியோடு | இயற்கை மனம் உடைய கூந்தல் கொண்ட உமாதேவியோடு மகிழ்ந்து இருந்த விதமும் |
சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் | சேவகன் ஆகி = வீரன் ஆகி ( திருவிளையாடல் புராணம் - யானை எய்த படலம் ) திண்சிலை ஏந்தி = வழிய வில்லை கையில் ஏந்தி | ஒரு மாபெரும் போர் வீரன் ஆகி வழிய வில்லை கையில் ஏந்தி ( திருவிளையாடல் புராணம் - யானை எய்த படலம் ) |
பாவகம் பலபல காட்டிய பரிசும் | பாவகம் = பல வகையான அம்புகள் எய்யும் இயல்பு பரிசும் = நல்ல தன்மையும் | பல வகையான அம்புகள் எய்யும் இயல்புகளை காட்டிய தன்மையும் |
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் | கடம்பூர் = திருக்கடம்பூர் என்ற சிவ ஸ்தலம் | திருக்கடம்பூர் என்ற சிவ ஸ்தலம் அதனில் அழகாக இறைவன் கோயில் அமைய பெற்றும் |
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் | ஈங்கோய் மலை = திரு வீங்கோய் மலை ( திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலையில் உள்ள பச்சை மரகத லிங்கம் மிக அழகானது ) எழிலது காட்டியும்= அழகிய மரகதமேனியை காட்டியும் | திரு வீங்கோய் மலையில் அழகிய பச்சை மரகதமேனியை காட்டியும் |
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85 | ஐயாறு = திருவையாறு சைவன் = கோயில் பூசாரி ( திருவையாற்றுப் புராணம் ) | திருவையாறு என்ற சிவா தலத்தில் கோயில் பூசாரி ஆகியும் |
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் | துருத்தி = தஞ்சாவூரில் உள்ள குத்தாலம் அருத்தியோடு = அருள் புரியும் ஆசையோடு | தஞ்சாவூரில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் உள்ள சிவ தலத்தில் அருள் புரியும் ஆசையோடு அமர்ந்து இருந்ததும் |
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் | திருப்பனை = திருப்பனை ஏன்ற ஊரில் விருப்பன் = ஆசையுடன் , அன்புடன் ( இறைவன் சௌந்தரேசுவரன் - எல்லோராலும் விரும்பப்படும் அழகன்) | திருப்பனை ஏன்ற ஊரில் எல்லோராலும் விரும்பப்படுதலுக்குரிய அழகனாக அமர்ந்தும் |
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் | கழுமலம் = சீர்காழி | சீர்காழி திருத்தலத்தில் தனது திருவுருவினை தரிசனம் காட்டி காட்சி கொடுத்தும் |
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் | கழுக்குன்று = திருக்கழுக்குன்றம் வழுக்காது = தப்பாது | திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் தவறாது காட்சி அளித்ததும் |
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90 | புறம்பயம் = திருப்புறம்பயம். கும்பகோணத்திற்கு வட மேற்கே மண்ணியாற்றின் வட கரையில் உள்ள ஊர். அறம்பல = அற நூல்கள் பல | கும்பகோணத்திற்கு வட மேற்கே மண்ணியாற்றின் வட கரையில் உள்ள திருப்புறம்பயம் என்ற ஊரில் அற நூல்கள் பல அருளியும் |
குற்றாலத்துக் குறியாய் இருந்தும் | குற்றாலம் = திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலம் குறியாய் = சிவலிங்க வடிவாய் தோன்றுதல் | திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலம் என்ற தலத்தில் திருமாலின் திருவுவம் அகத்திய முனிவரால் சிவலிங்க வடிவ திருவுவமாய் அதில் எழுந்து அருளுதலும் |
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து | அந்தமில் பெருமை = முடிவு இல்லாத பெருமை அழல் = தீ பிழம்பு போன்ற உரு = உருவம் கரந்து = மறைத்து | முடிவு இல்லாத பெருமையினை உடைய தீ பிழம்பு போன்ற உருவத்தை மறைத்து |
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு | சுந்தர = அழகிய வேடத்து = வேடம் அதனை ஒருமுதல் = ஆதி மூல உண்மைப்பொருள் உருவுகொண்டு = உருவம் கொண்டு | அழகிய கோலத்தினையுடைய ஈடு இணை இல்லாத ஆதி மூல உண்மைப்பொருள் உருவம் கொண்டு |
இந்திர ஞாலம் போலவந்து அருளி | இந்திர ஞாலம் = இந்திரசால வித்தை | இந்திரசால வித்தை போல வந்து அருளி |
எவ்வெவர் தன்மையும் தன்வயிர் படுத்துத் 95 | எவ்வெவர் தன்மையும் = எல்லா தெய்வங்களின் தன்மையும் தன்வயிர் படுத்து = தன்னிடத்தே அடங்க வைத்து | எல்லா தெய்வங்களின் தன்மையும் இறைவன் சிவபெருமான் தன்னிடத்தே அடங்க வைத்து |
தானே ஆகிய தயாபரன் எம் இறை | தயாபரன் = பேரருளாளன் | எமது இறைவன் தான் ஒருவனே முழு முதல் கடவுள் ஆகி பேரருளாளன் ஆகி |
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி | சந்திர தீபம் = சந்திரத்தீவு சாத்திரன் = சாஸ்திரங்களில் வல்லவன் | சந்திரத்தீவு அதனில் சாஸ்திரங்களில் வல்லவன் ஆக இருந்து அருளி |
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் | அந்தரத்து = ஆகாயம் இழிந்து = இறங்கி அமர் = பொருந்திய பாலை = சந்திரதீபத்தில் உள்ள தலம் ( திருக்கழிப்பாலை எனவும் பொருள் உண்டு) | ஆகாயத்தில் இருந்து கீழே பூவுலகில் இறங்கி வந்து , அழகு பொருந்திய திருக்கழிப்பாலை ( சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது ) என்ற சிவ தலத்தில் |
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் | சுந்தரம் = அழகு துதைந்து = நெருங்கி | அழகிய தன்மையோடு அடியவர்களுக்கு நெருங்கி இருந்து அருளியும் |
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100 | மந்திர மாமலை = ஆகம நூல்கள் வெளிப்படுத்திய மலை மகேந்திர = மகேந்திர மலை வெற்பன் = உடையவன் | மந்திர ஆகம நூல்கள் வெளிப்படுத்திய மகேந்திர மலையை உடையவன் எம் இறைவன் |
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் | அந்தம் = முடிவு அந்தம் இல் = முடிவு இல்லாத அண்ணல் = எம் பெருமான் சிவபெருமான் | முடிவு என்று ஒன்று இல்லாத பெருமையையும் , அருள் என்றும் வழங்கும் எங்கள் சிவபெருமான் |
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் | எம் தமை = என்னை பகரின் = சொல்லுதல் | என்னை ஆட்கொண்டு ஆண்ட என் இறைவனின் நன்மை அதை சொல்லுவதனால் |
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு | ஆற்றல் = சர்வ வல்லமை ஆற்றல் அது உடை என்பது முதல் பத்து தசாங்கம் ஆகிய பத்து உறுப்புகளை சொல்ல துவங்குகின்றர் மாணிக்கவாசகப்பெருமான் அந்த பத்து தசாங்கங்கள் பின்வருமாறு கொடி , ஆறு , முரசு, படை , மாலை , ஊர்தி , நாடு, ஊர் , பெயர் , மலை அது உடை = அது உடைய அழகு அமர் = அழகு பொருந்திய | முதல் பத்து தசாங்கம் ஆகிய பத்து உறுப்புகளை சர்வ வல்லமை உடைய அழகு பொருந்திய எம் பெருமான் இறைவன் திருவருவதால் |
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் | நீற்றுக் கோடி = திருநீற்றின் வளைந்த வரி கோடுகள் | திருநீற்றின் வளைந்த கோடுகளை சிவ பெருமான் தன் திரு உடலில் தரித்து காட்டியும் |
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105 | ஊனம் தன்னை = பிறவித்துன்பம் எனும் கேட்டினை ஒருங்கு உடன் = ஒரு சேர , முழுவதுமாக அறுக்கும் = நீக்கும் | பிறவித்துன்பம் எனும் கேட்டினை ஒரு சேர , முழுவதுமாக நீக்கும் |
ஆனந் தம்மே ஆறா அருளியும் | ஆனந்தமே = சிவஞான பேரின்பம் ஆறா அருளியும் = ஆறு போல வற்றாது அருளியும் ஆனந்தமே இங்கு ஆறு என பொருள் ஆக மாணிக்கவாசகப்பெருமான் உரைத்துள்ளார். இந்த ஆறு தசாங்கத்தில் இரண்டாவதாக வருவது | சிவஞான பேரின்பம் அதனை ஆறு போல வற்றாது அருளியும் |
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் | மாதிற் கூறு உடை = மாது கூற்றிலுடை என்று உறுபு பிரித்து பொருள் கொள்ள வேண்டும். உமை அம்மையை இட பாகத்தில் உடைய. மாபெரும் = மிகப்பெரிய கருணையன் = கருணை உடையவன் | உமை அம்மையை இட பாகத்தில் உடையவனாகி மிகப்பெரிய கருணை உடையவன் |
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் | நாதப் பெரும்பறை = ஒலி என்ற நாத தத்துவமே உலக தோற்றத்துக்கு மூலமானது. அதை இறைவனுக்கு முரசாக உருவகப்படுத்தி நாதப் பெரும்பறை என்று மாணிக்கவாசகப்பெருமான் நமக்கு விளக்கியுள்ளார். ( இங்கு நாத தத்துவமே முரசு என்ற உரைக்கப்பட்டடது. இந்த முரசு தசாங்கத்தில் மூன்றாம் அங்கமாக வருவது ) நவின்று = ஓங்கி / முழங்கி கறங்கவும் = ஒலிக்கவும் | நாதமாகிய பெரும் ஒலி பறை ஓங்கி ஒலிக்கவும் |
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் | அழுக்கு = மும் மலம் ( ஆணவம் , கன்மம் (ஆசை, பொறாமை), மாயை ) | மும் மல அழுக்கு அடியவர்களை அணுகாமல் அவர்களை அருளாட்சி செய்து கொண்டு அருள்பவன் |
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110 | கழுக் கடை = சிவபெருமானிடம் உள்ள மூன்று தலைகளை உடைய முத்தலை சூலாயுதம் ஆன திரிசூலம் என்ற வேல். அது இன்பம், மெய்வறிவு, நற்செயல் என்ற குணங்களை கொண்டது. ( இங்கு முத்தலை சூலாயுதமே படை என்ற உரைக்கப்பட்டடது. இந்த படை தசாங்கத்தில் நான்காம் அங்கமாக வருவது ) | திரிசூலம் தன்னை என் இறைவன் திருக்கையினால் தாங்கி அருளியும் |
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் | மூலம் = மூல கரணம் மும்மலம் = மும் மலம் ( ஆணவம் , கன்மம் (ஆசை, பொறாமை), மாயை ) | உயிர்களின் துன்பங்களுக்கு மூல கரணம் ஆகிய மும்மலம் அதனை வேரோடு அறுத்து |
தூய மேனிச் சுடர்விடு சோதி | தூய = பரிசுத்த மேனி = திருவுடல் சுடர்விடு = பிரகாசமாக | பரிசுத்தமாக உள்ள எம் இறைவன் திருவுடல் மிகுந்த பிரகாசமாக ஒளி வீசி பேரொளி போல உள்ளது |
காதலன் ஆகிக் கழுநீர் மாலை | காதலன் ஆகி = அன்புக்கு உரியவன் ஆகி கழுநீர் மாலை = செங்கழுநீர் மலர் மாலை ( இங்கு செங்கழுநீர் மலர் என்பது மாலை என்ற உரைக்கப்பட்டடது. இந்த மாலை தசாங்கத்தில் ஐந்தாம் அங்கமாக வருவது ) | அன்புக்கு உரியவன் ஆகி செங்கழுநீர் மலர் மாலை |
ஏல் உடைத்தாக எழில்பெற அணிந்தும் | ஏல் = பொருத்தம் | பொருத்தம் உடையதாக மிக்க அழகு பெற கழுத்தில் அணிந்தும் |
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115 | அரி = திருமால் பிரமற்கு = பிரம்மா | திருமால் , பிரம்மா ஆகியவர்களுக்கு அளவு அறியப்படாதவன் |
பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் | பரி = குதிரை பரிமா = குதிரை ஆகிய விலங்கு பயின்ற = பயில்தல் , பலமுறை ஈடுபடுதல் , குதிரை மீது பல காலம் ( நீண்ட பொழுது ) ஊர்ந்து வந்ததை குறிக்கும் வண்ணம் = சிறப்பு ( இங்கு குதிரை என்பது ஊர்தி என்ற உரைக்கப்பட்டடது. இந்த ஊர்தி தசாங்கத்தில் ஆறாம் அங்கமாக வருவது ) | குதிரையின் மீது அழகாக நீண்ட நேரம் பயணம் செய்த சிறப்பும் |
மீண்டு வாராவழி அருள் புரிபவன் | மீண்டு வாரா வழி = பரமுக்திவழி , சிவலோகம் சென்ற ஆத்மா மீண்டும் பிறவி எடுத்து இந்த உலகத்தில் திரும்பி வராத வழி | இந்த உலக பிறவியை மறுபடி நாம் எடுக்காமல் அருள் செய்யும் நம் அருள் பொழியும் இறைவன் |
பாண்டி நாடே பழம்பதி ஆகவும் | பாண்டி நாடே = பாண்டியன் நாடு பழம் = பழைய பதி = இருப்பிடம் ( இங்கு பாண்டிநாடு என்பது நாடு என்ற உரைக்கப்பட்டடது. இந்த நாடு தசாங்கத்தில் ஏழாம் அங்கமாக வருவது ) | மதுரையை தலைநகரமாக கொண்ட பாண்டி நாட்டையே தனது பழைய இருப்பிடமாகவும் |
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் | பக்தி = அன்பு பக்தி செய் = அன்பினால் பக்தி வழிபாடு செய்பவர்கள் அடியாரை = சிவன் அடியவர்கள் பரம் = மேலானது பரம்பரத்து = அதி மேலான உய்ப்பவன் = உயரச்செய்பவன் | அன்பினால் பக்தி வழிபாடு செய்யும் சிவன் அடியவர்களை மிகவும் மேலான நிலையில் உயரச்செய்பவன் |
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120 | உத்தர கோச மங்கை = உத்திரம்-உபதேசம். கோசம்-ரகசியம். மங்கை-பார்வதி தேவி. அப்பன் ஈசன் அம்மை பார்வதி தேவிக்கு ரகசிய உபதேசம் செய்த இடம் ( இங்கு உத்தரகோசமங்கை என்பது ஊர் என்ற உரைக்கப்பட்டடது. இந்த ஊர் தசாங்கத்தில் எட்டாம் அங்கமாக வருவது ) | உத்தரகோசமங்கை என்ற ஊரை தனது சொந்த ஊராகவும் |
ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய | ஆதி மூர்த்திகள் = பிரம்மா, விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் , சதாசிவன் | ஆதி மூர்த்திகள் ஆகிய பிரம்மா, விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் ஆகியோருக்கு அருள்புரிந்து அருளிய இறைவன் |
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் | தேவ தேவன் = மகாதேவன். தேவர்களுக்கு தேவன் ( இங்கு தேவதேவன்என்பது பெயர் என்ற உரைக்கப்பட்டடது. இந்த பெயர் தசாங்கத்தில் ஒன்பதாவது அங்கமாக வருவது ) | தேவர்களுக்கு தேவன் ஆகி மகாதேவன் என்ற திருப் பெயர் ஆகவும் |
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி | இருள் = அறியாமை கடிந்து = போக்குதல் , நீக்குதல் இன்ப ஊர்தி = பேரின்ப வடிவாகிய ரிஷப காளையை வாகனமாக உடையவன் / அறியாமை என்ற துன்பத்தை நீக்கி ஞானம் எனும் பேறின்பதை அளிப்பவன் இறைவன் | அனைத்து அடியவர்களின் அறியாமை என்ற துன்பத்தை நீக்கி ஞானம் எனும் பேறின்பதை அளிப்பவன் இறைவன் |
அருளிய பெருமை அருள்மலை யாகவும் | அருளிய பெருமை = அடியவர்களுக்கு அருள் செய்த பெருமை அருள்மலை யாகவும் = அந்த பெருமையே அருள் மலையாகவும் ( இங்கு அருள் என்பது மலை என்ற உரைக்கப்பட்டடது. இந்த மலை தசாங்கத்தில் பத்தாவது அங்கமாக வருவது ) | அடியவர்களுக்கு அருள் செய்த பெருமையே அருள் மலையாகவும் ( இங்கு அந்த பத்து தசாங்கங்கள் நிறைவு அடைந்தது கொடி , ஆறு , முரசு, படை , மாலை , ஊர்தி , நாடு, ஊர் , பெயர் , மலை ) |
எப்பெருந் தண்மையும் எவ்வெவர் திறமும் 125 | எப்பெருந் தண்மையும் = எவர் எவர் எந்த பெருந்தன்மையை கொண்டுஉள்ளாரோ திறம் = வகை எவ்வெவர் திறமும் = ஏனைய அன்பு முறை வகைகளையும் | எவர் எவர் எந்த பெருந்தன்மையை கொண்டுஉள்ளாரோ மற்றும் ஏனைய அன்பு வகைகளையும் |
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி | அப்பரிசு அதனால் = அந்த தன்மைகளால் | அந்த தன்மைகளால் அடியவர்களை அருள் புரிந்து ஆண்டு அருளி |
நாயினேனை நலம்மலி தில்லையுள் | நாயினேனை = நாய் போன்ற என்னை நலம் = நன்மை மலி = மிகுந்த தில்லையுள் = சிதம்பரம் என்ற தில்லை திரு தளத்தின் உள் | நாய் போன்ற என்னை நன்மை மிகுந்த சிதம்பரம் என்ற தில்லை திரு தளத்தின் உள் |
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன | கோலம் = அழகு கோலம் ஆர் தரு = அழகு உடைய பொதுவினில் = அம்பலத்தில் ( பொது = வெட்டவெளி என்ற ஆகாயம் ) | அழகு உடைய தில்லை அம்பலத்தில் வருக என்று |
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி | ஏல = பொருந்த ஈங்கு - இவ்விடத்தில் , இங்கு ஒழித் தருளி = என் வினைகளை ஒழித்து அருளி | எனது வினைக்கு பொருந்த ஏற்றவாறு என்னை இங்கு இவ்விடத்தில் என் வினைகளை ஒழித்து அருளி |
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130 | அன்று உடன் சென்ற = அந்நாளில் தன்னுடன் வந்த ( அன்று = இறைவன் அடிகளை ஆட்கொள்ள வந்த நாள் ) | அந்நாளில் தன்னுடன் வந்த தன் அருளை பெற தகுதியான அடியவர் |
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் | ஒன்ற ஒன்ற உடன் = இறைவனுடன் ஒன்ற/இனைய | தன்னுடன் பொருந்த பொருந்த அடியவர்களோடு இரண்டற கலந்து அருளியும் |
எய்த வந்திலாதார் எரியில் பாயவும் | எய்த = அடைய வந்திலாதார் = வர இயலாதவர்கள் எரியில் = ஞானத்தீ என்ற எரியில் | இறைவனது அருளை அடைய வர இயலாதவர்கள் ஞானத்தீயில் பாய்ந்து தன்னோடு கலக்கவும் |
மாலது வாகி மயக்கம் எய்தியும் | மால் = வேட்கை , ஏக்கம் மயக்கம் எய்தியும் = மயக்கம் அடைந்தும் | தம் மீது வேட்கை அதிகமாகி தன்னோடு கலக்க இயலாததால் மயக்கம் அடைந்தும் |
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் | பூதலம் அதனில் = பூமி அதனில் | உடலை விட்டு நீங்க பூமி அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் |
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135 | கால் விசைத்து ஓடி = காலால் வேகம் எடுத்து ஓடி கடல் = பேரானந்த பரமானந்த கடல் மண்டி = வேகமாக சென்று , மிக்குச்சென்று | காலால் வேகம் எடுத்து ஓடி பேரானந்த பரமானந்த கடல் உள் புக வேகமாக சென்று |
நாத நாத என்று அழுது அரற்றி | நாத நாத = இறைவா இறைவா அரற்றி = வாய்விட்டு புலம்பி | இறைவா இறைவா என்று அழுது வாய்விட்டு புலம்பி |
பாதம் எய்தினர் பாதம் எய்தவும் | பாதம் எய்தினர் = தன் உடலை நீத்தவர்கள் பாதம் எய்தவும் = இறைவன் பாதத்தை அடையவும் | தன் உடலை நீத்தவர்கள் இறைவன் பாதத்தை அடையவும் |
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்று | பதஞ்சலி = பதஞ்சலி முனிவர் ( ஆதிசேஷன் மறுஅவதாரம் ) பரம = மேலான , இறைவன் நாடக = நாடகம் | பதஞ்சலி முனிவர் அவருக்கு அருளிய தில்லை திரு கூத்து நாடகம் என்று |
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் | இதம் = இருதயம் , இதயம் , உள்ளம் சலித்தல் = நிலையில்லாது போதல் | ( இறைவனை அடைய இயலாதவர் ) இதயம் சலிப்பு அடைந்தவர்கள் ஏங்கினர் ஏங்கி நிற்கவும் |
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140 | எழில் = எழுச்சி அம்பொன் = அழகிய பொன் | எழுச்சி பெறும் இமயமலையின் தன்மை உடைய அழகிய பொன் |
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் | பொலிதரு = (பொன் )வேய்ந்து விளங்கும் புலியூர் = புலிக்கால் முனிவர் சிவபெருமானை சிதம்பரத்தின் கண் வழிபட்டதால் தில்லை புலியூர் என்று அழைக்கப்பட்டது | (பொன் )வேய்ந்து விளங்கும் தில்லைஅம்பலத்தில் நடனம் செய்த |
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு | கனிதரு செவ்வாய் = கொவ்வைப்பழம் போல சிவந்த வாய் உடைய உமையொடு = அன்னை பார்வதிதேவியோடு காளிக்கு = காளி அன்னைக்கும் | கொவ்வைப்பழம் போல சிவந்த வாய் உடைய அன்னை பார்வதிதேவியோடு காளி அன்னைக்கும் |
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை | அருளிய = அருள் செய்த திருமுகத்து = இறைவன் திருமுகம் சிறுநகை = புன்முறுவல் | அருள் செய்த இறைவன் திருமுகம் அழகு உடையதாகவும் புன்முறுவல் கொண்டதாகவும் |
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் | ஈண்டிய = இறைவன் திருவடிகளை சரண் அடைந்த | இறைவன் திருவடிகளை சரண் அடைந்த அடியவர்களோடும் |
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145 | பொலிதரு புலியூர் = பொலிவாக விளங்குகின்ற தில்லைனுள் | பொலிவாக விளங்குகின்ற தில்லைனுள் புகுந்து இனிதாக எழுந்து அருளினான் |
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே | ஒலி = தெய்வப்பாடல்களின் ஓலி , இசை ஓலி , சிவ சிவ எனும் ஓலி ஒலி தரு கைலை = மந்திர ஒளி பயிலும் கயிலை கிழவோன் = உரிமையுடையவன் உயர்கிழவோன் = உயர்ந்த இறைவன் | தெய்வப்பாடல்களின் ஓலி , இசை ஓலி , சிவ சிவ எனும் ஓலி மற்றும் மந்திர ஒளி பயிலும் கயிலை மலையின் உயர்ந்த இறைவனே |
திருச்சிற்றம்பலம் | ||
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். | ||
சைவ மகுடம் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி! சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! பராய்த்துறை மேவிய பரனே போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! சீரார் திருவையாறா போற்றி! ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! பாகம் பெணுரு ஆனாய் போற்றி! தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி! இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி! குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளுந்தானும் உடனே காண்க! காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி! இன்பமே சூழ்க!! எல்லோரும் வாழ்க!!! | ||
திருச்சிற்றம்பலம் | ||
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து. |
No comments:
Post a Comment